தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடத்தூர் கிளை நூலகமும், வாசிப்பை நேசிப்போம் இயக்கமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
முன்னதாக நடைபெற்ற நூலக விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு தலைமை ஆசிரியை ரமாதேவி தலைமை வகித்தார். பள்ளி நூலகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியை கோகிலா முன்னிலை வகித்தார்.
நூலக விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேசிய வாசிப்பை நேசிப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நூலகர் சி. சரவணன், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட வாசிப்பின் மூலம் மாணவர்கள் மொழிஅறிவு, படைப்பாற்றல், தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் கோ. மலர்வண்ணன் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். முன்னதாக ஆசிரியை வி. அன்புக்கரசி வரவேற்றார். முடிவில் வாசிப்பை நேசிப்போம் இயக்கத்தின் பொறுப்பு ஆசிரியை சின்னசாமி நன்றி கூறினார்.
அக்டோபர் இறுதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.