தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேசிய கூட்டுறவு இணையத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2016-17-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 7,690 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 1,70,193 மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்து 11.15 சதவீத சர்க்கரை கண்டுமானத்தில் (sugar recovery) 1,89,920 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது.
இதற்காக தில்லியிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரைஆலைகளின் இணையம் தேசிய விருதை வழங்கியுள்ளது.
இந்த விருதை மத்திய உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் சி.ஆர்.செளத்ரி கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி, மேலாண்மை இயக்குநர் பி.என்.ஸ்ரீதர், துணைத் தலைமை ரசாயனர் பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், தேசிய கூட்டுறவு இணையத்தின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் பவார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.