தமிழக அரசால் வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தைப் பெரியார் விருதை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுவர்களைச் சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தைப் பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதில் ரூ.ஒரு லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
2017-ஆம் ஆண்டுக்கான தந்தைப் பெரியார் விருதாளர் மாநில அரசால் தேர்வு செய்யப்படவுள்ளார்.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் முழு சுய விவரங்களைக் குறிப்பிட்டு, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.