தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 204 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்ற 6 பேருக்கான பணிநியமன ஆணைகளையும், உதவித் தொகை கோரி 2 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கான ஆணைகளையும், ஒருவருக்கு விதவைத் தொகைக்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பாஸ்கர், கலால் உதவி இயக்குநர் மல்லிகா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியர் முத்தையன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.