தருமபுரி மாவட்டத்தில் வேளாண் திட்ட பணிகள் குறித்து வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி சனிக்கிழமை வயலாய்வு செய்தார்.
காரிமங்கலம் வட்டாரத்திற்குள்பட்ட பெரியாம்பட்டியில், விதைப்பண்ணை பதிவு செய்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் பயிர்களை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, கெட்டுமாரனள்ளியில் கூட்டு பண்ணை முறைதிட்ட விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களான நீடித்த நிலையான மானாவரி இயக்கம், நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்குத் தேவையான நுண்ணீர் பாசன கருவிகள் அமைத்தல் மற்றும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு மானியம் மூலம் நிகழ் பருவத்திற்குத் தேவையான இடுபொருள்களான கொள்ளு, ராகி, தென்னங் கன்றுகள், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவருக்கு, வேளாண் இயந்திரமான ரோடோவேட்டர் ரூ.75,000 மானியமாக வேளாண் இயக்குநர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், வேளாண் இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசிலா, துணை இயக்குநர் வீராசாமி,
வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.