அரூரில் போக்குவரத்து காவலர்கள் பயன்படுத்தும் நிழல் குடை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அரூர் பழைய பேட்டை, பேருந்து நிலையம், 4 வழி சாலை, கச்சேரி மேடு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையில், அரூரில் முக்கிய சாலை சந்திப்புகளில் காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இங்கு பணிபுரியும் காவலர்களுக்கு தேவையான நிழல்குடைகள் இல்லை. இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன.
இதையடுத்து, அரூர் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனம் சார்பில், நிழல்குடைகள் அமைக்கப்பட்டன. இந்த நிழல்குடைகளை அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லபாண்டியன் திறந்து வைத்தார். இதில், காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் ரத்தினம், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.