பாஜகவினர் மெளன ஊர்வலம்; அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து, தருமபுரியில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை மெளன ஊர்வலம் சென்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து, தருமபுரியில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை மெளன ஊர்வலம் சென்றனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த, பாஜக சார்பில் தருமபுரி ஆவின் பாலகம் அருகிலிருந்து மெளன ஊர்வலம் புறப்பட்டது. பாஜக தருமபுரி மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.வரதராஜன் தலைமையில் தொடங்கிய இந்த ஊர்வலம், நான்கு முனைச் சாலை சந்திப்பு, தலைமை அஞ்சலக சாலை, நகராட்சி அலுவலக சாலை வழியாக தொலைத்தொடர்பு நிலையம் வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப் படத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஒசூரில்...
ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தன. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள்  அடைக்கப்பட்டன. வாஜ்பாய் உருவப் படத்துக்கு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் பேருந்து நிலைய முன் வெள்ளிக்கிழமை காலை மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர் சி.மாது, நகரத் தலைவர் பி.ஆர். மூர்த்தி மற்றும் கல்வியாளர் பிரிவு பிரணவகுமார் ஆகியோர் வாஜ்பாய் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் ஒன்றிய செயலர்கள் சாமிநாதன், எக்கூர் செல்வம் ஆகியோர் தலைமையில் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் தொடங்கிய ஊர்வலம், முக்கியச் சாலைகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.
அரூரில்...
தீர்த்தமலை பேருந்து நிறுத்த வளாகத்தில் பாஜக பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர்  ஜி.ராஜேந்திரன் தலைமையில், அந்தக் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், அரூர் ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டியில் பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச் செயலர் கே. குழந்தை ரவி தலைமையிலும் அக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
போச்சம்பள்ளியில்...
போச்சம்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாஜகவினர் வாஜ்பாய் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே, பாஜக சார்பில் அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு அந்தக் கட்சியின் நகரத் தலைவர் வேணுசெல்வம் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அரிகோட்டீஸ்வரன், தேசிய சிறுபான்மை அணி துணைத் தலைவர் முனவரி பேகம், ஒன்றியத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com