தருமபுரி பேருந்து நிலையத்துக்குள் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில், தடையை மீறி தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த நகர காவல் நிலையப் போலீஸார் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 19 பேரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.