தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.
தமிழர்களின் பிரதானமான பண்டிகைகளுள் ஒன்றான பொங்கல் பெருவிழாவை மாநிலம் முழுவதும் சமத்துவ பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள ஏஆர்டி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் விழாவைத் தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவின் அடையாளமாக இனிப்புப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.கங்காதர், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பொன்னுராஜ், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சீனிவாசராஜு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் டாக்டர் ஜி.பிருந்தா, மேற்பார்வையாளர் கே.உலகநாதன், ஏஆர்டி மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.எழில் மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எச்ஐவியுடன் வாழ்வோர் சுமார் 50 பேர் பங்கேற்ற, உறியடித்தல், இசை நாற்காலி, ஸ்பூன் மூலம் எலுமிச்சம்பழத்தை எடுத்துச் செல்லுதல் ஆகிய விளையாட்டுகள் நடைபெற்றன.
'பாதுகாப்பில்லாத உடலுறவின் மூலம்தான் எச்ஐவி கிருமி மற்றவருக்கு தொற்றும் என்பதையும், அவர்களோடு பழகும் வழக்கமான நடவடிக்கைகளால் தொற்றாது என்பதையும் உணர்த்தும் வகையில்தான் இந்த சமத்துவ பொங்கலைக் கொண்டாடினோம்' என்றார் திட்ட மேலாளர் டாக்டர் ஜி.பிருந்தா.
அரசுப் பள்ளியில்
பென்னாகரம் அருகே மாங்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.சிவலிங்கம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பெ.அசோக்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி, பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது.