பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க களப் பணியாளர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை சமூக நலத்துறை சார்பில், களப் பணியாளர்களுக்கு உணர்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது, தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசு இறப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகப்படுத்தும் நோக்கில், கிராமம் மற்றும் நகரங்களில் பெண் குழந்தைகளின் பெருமைகள், அரசு வழங்கும் நலத் திட்டங்கள் குறித்து களப் பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டும். அதற்காக செயல் திட்டம் தயாரித்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முல்லை சாரதி, அலுவலர்கள், களப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.