பொதுவான தமிழ் எழுத்துரு உருவாக்கத்திலும், பல்வேறு வகையான தமிழ் எழுத்துக்களை யூனிகோடுக்கு மாற்றும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கித் தந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் தகடூர் கோபி (எ) த.கோபாலகிருஷ்ணன் (42) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தணிகாசலம் என்பவரின் மகனான இவருக்கு, மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். கணினி பொறியியலில் பட்டம் படித்துள்ள இவர், சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியுள்ளார். இணைய உலகில் அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை கோபி உருவாக்கியுள்ளார்.மாரடைப்பு காரணமாக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இவரது உடல் அன்று நள்ளிரவு தருமபுரியிலுள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.