தருமபுரி அருகே நத்தஅள்ளியில் மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள நத்தஅள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில், சுமார் 231 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளியில் சரிவர பாடம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி காலையில் வகுப்பை புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், சிறிது நேரம் கழித்து வளாகத்திலிருந்து பள்ளிக் கட்டடத்துக்குள்ளே சென்று வகுப்புகளுக்கு வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பொன்முடி மற்றும் இண்டூர் காவல் ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாணவ, மாணவியரின் கோரிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து, மாணவ, மாணவியர் வகுப்புகளுக்கு திரும்பினர்.