பாலக்கோடு அருகே ராசிக்குட்டை கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
பாலக்கோடு அடுத்த சிக்கதோரணபெட்டம் ஊராட்சிக்குள்பட்ட ராசிகுட்டை கிராமத்தில் ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 நியாய விலைக்கடைகள், 9 மகளிர் நியாய விலைக்கடைகள் மற்றும் கூட்டுறவுத் துறை கடைகள் என மொத்தம் 1055 நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது திறக்கப்பட்டுள்ள ராசிகுட்டை பகுதிநேர நியாயவிலைக் கடை 1055-ஆவது நியாயவிலைக் கடையாகும். இந்த நியாய விலைக்கடையானது வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் செயல்படும்.
தருமபுரி மாவட்டத்தில், 2097 பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் திட்டங்களை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், கூட்டுறவு துணைப் பதிவாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.