அரூர் வட்டம், டி.ஆண்டியூரில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். வேடகட்டமடுவு ஊராட்சி, டி.ஆண்டியூரில் இருளர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006-ன் படி பட்டா வழங்க வேண்டும், டி.ஆண்டியூரில் இருளர் சமூக மக்களை அச்சுறுத்தி வருவோர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயலர் எஸ்.பி.சின்னராசு, வி.தொ.ச. மாவட்ட பொருளர் இ.கே.முருகன், ஒன்றியச் செயலர்கள் ஆர்.மல்லிகா, கே.தங்கராசு, வட்ட செயலர் எஸ்.கே.கோவிந்தன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.