காரிமங்கலம் வட்டத்தைச் சேர்ந்த கெரகோடஅள்ளியில் காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஒரு வார கால முகாம் சனிக்கிழமை தொடங்கியது. மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் முகாமைத் தொடங்கிவைத்தார்.
கெரகோடஅள்ளி, கொட்டாவூர், பொன்னேரி, கீழூர் ஆகிய கிராமங்களில் தூய்மைப் பணிகள் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கெரகோடஅள்ளியில் இலவச கண் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன.
திங்கள்கிழமை கீழூரில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை பொன்னேரியில் சித்த மருத்துவ முகாமும், புதன்கிழமை கொட்டாவூரில் பெண் கல்வி, இள வயது திருமணத் தடுப்பு, சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை கொட்டாவூரில் தோட்டக்கலைப் பயிர்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் கு. நடராஜன், பெரியார் பல்கலை. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மு. செந்தில்குமார், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஏ. இளங்கோவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.