திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மற்றும் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 116 பேர் கைது செய்யப்பட்டனர்.
வி.ஹெச்.பி. நடத்தும் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்து, சென்னையில் மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து, தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில், மாவட்ட திமுக செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இதில், விஹெச்பி ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட சட்டப் பேரவை உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி, விடுதலைச் சிறுத்தைகள் மண்டல செயலர் பொ.மு.நந்தன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன் மற்றும் 7 பெண்கள் உள்பட 91 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, பென்னாகரம் பேருந்து நிலையம் முன் திமுக ஒன்றியச் செயலர் சி.செல்வராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.