பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்டச் செயலர் கே.பாஸ்கரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தெய்வம், முருகேசன், சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலர் கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலர் ஏ.பெரியசாமி ஆகியோர் பேசினர்.
இதில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு ஆண்டுகள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி பணியாளர்களின் தொகுப்பூதியத்தை மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். குறைந்த ஊதியத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்களை அரசாணை 325-இன் படி ஊரகப் பகுதிகளில் இடமாறுதல் செய்ய வேண்டும். தேசிய சுகாதார திட்டப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை நிர்ணம் செய்ய வேண்டும். பணியாளர்களின் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.