தருமபுரி மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத் திறனாளி நபர் வெற்றிவேல் என்பவருக்கு கணினி மையம் மற்றும் நகலகம் அமைத்துக் கொள்வதற்காக ரூ. ஒரு லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி திங்கள்கிழமை வழங்கினார் .
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இந்த நிதி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 261 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா கான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) கவிதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.