தமிழ்நாடு கலை, பண்பாட்டுத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு கலை விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்த காவடியாட்டக் கலைஞர் (ஓய்வுபெற்ற காவலர் பயிற்சியாளர்) கே. துரைசாமி மற்றும் ராமியம்பட்டியைச் சேர்ந்த நாகசுர கலைஞர் ஆர். கே. ராஜிவேல் ஆகியோருக்கு "கலை முதுமணி' விருதும், பென்னாகரம் பி. கொல்லப்பட்டியைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் ப. அண்ணாதுரை மற்றும் நடுப்பட்டியைச் சேர்ந்த தவில் கலைஞர் ரா. ரகுபதி ஆகியோருக்கு "கலை நன்மணி' விருதும் வழங்கப்பட்டன.
தருமபுரி ஓவியர் டி.எம். சோமசுந்தரம் மற்றும் நல்லம்பள்ளி தெருக்கூத்துக் கலைஞர் ஜெ. விஜயராகவன் ஆகியோருக்கு "கலைச் சுடர்மணி' விருதும், அனுமந்தபுரம் சிற்பி கே. கோவிந்தராஜ் மற்றும் அடிலத்தைச் சேர்ந்த பம்பைக் கலைஞர் வே. சிவக்குமார் ஆகியோருக்கு "கலை வளர்மணி' விருதும் வழங்கப்பட்டன.
அதியமான் கோட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்த விருதுகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா கான், சார் ஆட்சியர் ம.ப. சிவன் அருள், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் பா. ஹேமநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.