கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதிபடுத்த வேண்டும். கிராமப் புறத்தில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க உரிய சட்ட முன்வடிவை பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், மத்திய அரசு உரிய ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் ஏப்.18-ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், அரசு மருத்துவர்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து வட்டச் சாலை வரை ஊர்வலமாகச் சென்றனர்.
இதில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சோமசுந்தரம், உதயசூரியன், சங்கரன், கந்தசாமி, செந்தில்நாதன், கைலாஷ், ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.