போச்சம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூரை அடுத்த கள்ளிப்பட்டி கிராமத்தின் வழியாக அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வதாக போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போச்சம்பள்ளி வட்டாட்சியர் பண்டரிநாதன், பாரூர் வருவாய் ஆய்வாளர் சக்தி, கிராம நிர்வாக அலுவலர் சுவேந்திரன், இளநிலை உதவியாளர் சங்கர் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வேகமாக வந்த மணல் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் சிவன் என்பவருக்கு லாரி சொந்தமானது என்றும், நாகரசம்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் நல்லரசு (30) லாரியை ஒட்டி வந்ததும் தெரியவந்தது.
அதில், திருச்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 யூனிட் மணல் கிருஷ்ணகிரி வழியாக பேரிகை செல்ல இருந்தது தெரியவந்தது. உரிய அனுமதி இல்லாமல் மணல் எடுத்துச் சென்றதால், லாரியை பறிமுதல் செய்து, போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டுவர முயற்சித்தபோது ஓட்டுநர் நல்லரசு தப்பியோடினார். தப்பியோடிய ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.