"மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை'

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெறப்பட்ட 127 மனுக்களில் 100 மனுக்கள் ஏற்கப்பட்டன.
 கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாங்காய்கள் உதிர்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க மறுக்கப்படுகிறது. ஏரியிலிருந்து விளைநிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். வறட்சியால் காய்ந்து வரும் மா மரங்களை பாதுகாக்கும் வகையில், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர் சி.கதிரவன் பேசியது: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் டிராக்டர், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.
 கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சங்கரன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ராஜாமுகமது, உதவி வனப் பாதுகாவலர் பிரிதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com