ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி வியாழக்கிழமை அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் துரை தலைமை வகித்தார். இதில் ஒசூரில் உள்ள 23 குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள வணிக வளாகங்களைச் சேர்ந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் தலைமை வகித்துப் பேசிய அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர், ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஒரு டாஸ்மாக் கடையை இரண்டு கடைகளாக திறந்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தச் சாலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக இந்த அரசு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தாவிடில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதில் ஹோஸ்டியா சங்கத் தலைவர் வி.ஞானசேகரன், முன்னாள் தலைவர் ராமலிங்கம், சமூக ஆர்வலர் ஒய்.வி.எஸ்.ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை மனுவை ஒசூர் வட்டாட்சியர் பூசன்குமாரிடம் வழங்கினர்.