சூளகிரியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் வாணியர் தெரு, கோட்டை தெரு ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக கடுமையான குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், அப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, சுந்தரபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், வாணியர் தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.