கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், ஒசூர் கல்வி மாவட்டம் சார்பில், 2017- 2018 ஆண்டுக்கான மாவட்ட அளவிலான பாரதியார் மற்றும் குடியரசு தின தடகளப் போட்டிகளை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி..பாலகிருஷ்ணா ரெட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்றார்.
இந்த தடகளப் போட்டிகள் ஆக். 11, 12 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ, மாணவியரும், தனியார் பள்ளியைச் சேர்ந்த 450 மாணவ, மாணவியரும் என மொத்தம் 1,100 மாணவ, மாணவியர் 33 விதமான தடகளப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக அமைச்சர் பி..பாலகிருஷ்ணா ரெட்டி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து தடகளப் போட்டிகளை தொடக்கி வைத்தார். இதில் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரங்கநாத், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.