பாரூர் ஊராட்சி அலுவலகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரூர் ஊராட்சியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பள்ளி மற்றும் முக்கிய கடை வீதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை வாடகை டிராக்டர் மூலமாக அகற்றி வந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேர விடாமல் தினமும் குப்பைகளை அள்ள அரசு புதிதாக 10-க்கும் மேற்பட்ட குப்பை வண்டிகளை வழங்கியுள்ளது. ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினர் முக்கியப் பகுதிகளில் பெரிய அளவில் குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளனர். ஆனால், வீடுகளில் நேரடியாகச் சென்று குப்பைகளை சேகரிக்க குப்பை வண்டிகளை மட்டும் இதுவரை பயன்படுத்தாமல், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பாரூர் ஊராட்சி அலுவலகத்தின் முன் வீணாக நிறுத்தி வைத்துள்ளனர் குப்பை வண்டிகளை பயன்படுத்த ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே வீணாகும் குப்பை வண்டிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.