போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் கட்டணமில்லா ஆதார் சேவை மையம் கடந்த ஒரு வார காலமாக திறக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு, குழந்தைகள், விடுபட்டோர், பெயர் திருத்தம் என பல்வேறு காரணங்களுக்காக தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த ஆதார் சேவை மையம் கடந்த ஒரு வார காலமாக திறக்கப்படாததால், பொதுமக்கள் தினமும் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது அரசு மையத்தை மட்டுமே நாட வேண்டிய கட்டாய சூழலில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து ஆதாரில் பெயர் திருத்தம் செய்ய வந்த மாதையன் கூறியது, இந்த சுற்று வட்டாரத்தில் இந்த ஆதார் மையம் மட்டுமே உள்ளது. இதுவும் அவ்வப்போது திறக்கப்படாததால், கடந்த ஐந்து நாள்களாக வந்து செல்வதாக கூறினார். எனவே, முறையாக இந்த ஆதார் மையத்தை தினமும் திறந்து மக்களின் சேவைக்காக செயல்பட வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.