கெலமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், போடிச்சிப்பள்ளி ஊராட்சி அனுசோனை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில் கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் விவசாய நிலங்களில் இருந்தும், பணம் கொடுத்தும் தண்ணீர் வாங்கி, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தியும், குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாப்ராஜ் தலைமையிலான அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாள்களில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் ஒன்றரை மணி நேரம் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.