தேன்கனிக்கோட்டையில் காதல் விவகாரத்தில் இளைஞருக்கு கத்திக் குத்து விழுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா மகன் மூர்த்தி (28). இவர் வெள்ளிக்கிழமை தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றியதில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் மூர்த்தியை சரமாரியாக குத்தி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இதில் மூர்த்தி படுகாயம் அடைந்தார்.
காயங்களுடன் கிடந்த மூர்த்தியை பொதுமக்கள் சிலர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அதில், காதல் விவகாரம் காரணமாக மூர்த்தியை கத்தியால் குத்தப்பட்டது தெரிய வந்தது. கத்தியால் குத்தி தப்பிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.