கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலப்படம், தரம் குறைவான உணவு பொருள்களை தயாரித்து, விற்பனைக்கு அனுப்பிய 37 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மூலமாக கலப்படம், தரம் குறைந்த மற்றும் ஒழுங்கீன உணவுப் பொருள்களைக் கண்டறிந்து உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் 61 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் ஆய்வு முடிவின் அடிப்படையில் உணவுப் பொருள்களைத் தயாரித்தவர், விற்பனைக்கு வழங்கியவர் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி 37 வழக்குகள், மாவட்ட கூடுதல் நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்டு தண்டனையாக ரூ. 3,99,750 அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 15 வழக்குகள் தொடர ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்புத் துறை மூலமாக பெறப்படும் உரிமம் பதிவு சான்றிதழ் பெற கடைசி தேதி முடிவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இதுநாள் வரை உரிமம் பதிவு சான்றிதழ் பெறாத உணவு வணிகர்கள் அனைவரும் தவறாமல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நியமன அலுவலகத்தினை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.