அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஊதியக்குழு ஏமாற்றத்தை வலியுறுத்தி ஊத்தங்கரை ஒன்றிய ஐசிடிஎஸ் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க ஒன்றிய செயலர் சுஜாதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பாண்டிச்சேரி அரசு வழங்குவது போல இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கி காலமுறை ஊதியத்துக்குள் கொண்டுவர வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பல்வேறு போராட்டங்கள் தொடந்து நடைபெறும் என தெரிவித்தனர்.