கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 72 சத வீடுகளில் சுகாதார கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூய்மைப் பாரதம் திட்டம் குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஆட்சியர் பேசியது: இம் மாவட்டத்தில் 72 சத வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 149 ஊராட்சிகள் 100 சதவீதம் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. 2018 -ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டு 100 சதவீத திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக் குழுக்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், 194 சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மூலம் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள் கட்டும் தொழிலாளர்களுக்கு தக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தை ஊக்கப்படுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்தக் கருத்தரங்கில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நரசிம்மன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.