ஒசூர் நகராட்சிக்குள்பட்ட 45 வார்டுகளிலும் மக்காத குப்பைகளை மூன்று சக்கர வாகனங்களில் சென்று சேகரிக்கும் புதிய திட்டப் பணியை ஒசூர் நகராட்சி ஆணையாளர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
முன்னதாக இத் திட்டப் பணிக்குத் தேவையான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் இந்தியன் வங்கி சார்பில் இரு வாகனங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் இரு வாகனங்களும், சிண்டிகேட் வங்கி சார்பில் ஒரு வாகனமுமாக மொத்தம் 5 வாகனங்கள் ஒசூர் நகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வாகனங்களை ஒப்படைக்கும் விழா புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவில் ஒசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், இந்தியன் வங்கி மேலாளர் ரங்கராஜன், சிண்டிகேட் வங்கி முதன்மை மேலாளர் பிரசாத், பஞ்சாப் நேஷனல் வங்கி நடராஜன், ஒசூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, மணி, கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து இவை குப்பைகள் அள்ளும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.