குடிநீர் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பர்கூர் வட்டம், மல்லப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர் மற்றும் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளது:
எங்கள் குடியிருப்பில் உள்ள 150 குடும்பங்களில் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் இப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளோம். இது குறித்து பொதுமக்களாகிய நாங்கள் மல்லப்பாடி கிராம ஊராட்சி செயலர், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியரிடம் நேரிலும், எழுத்துப் பூர்வமாகவும் குடிநீர் வழங்கக் கோரி வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எங்களுக்கு குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகிலேயே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாயிலும், பர்கூர் பகுதிக்குச் செல்லும் குழாய்களிலும் தினமும் குடிநீர் செல்கிறது. இதில் ஏதாவது ஒரு குடிநீர் இணைப்பை வழங்கினால் எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பஞ்சம் தீர்ந்துவிடும். எனவே, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.