ஒசூரில் தனியார் பள்ளி மாணவரை மிரட்டி பணம் பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். மேலும், நான்கு மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒசூர் முனீஸ்வர் நகர் ஆஞ்சநேயர் கோயில் அருகே வசித்து வருபவர் 10 வயது சிறுவன். இவர், தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் தினமும், முனீஸ்வர் நகரைச் சேர்ந்த தன் நண்பர்கள் சிலருடன், அந்தப் பகுதியில் விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில், சிறுவனை ஏமாற்றி, அடிக்கடி வீட்டிலிருந்து பணம் எடுத்து வருமாறு அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு ரூ. 40 ஆயிரத்தை அந்தச் சிறுவன் வீட்டிலிருந்து எடுத்து வந்து, தன் நண்பர்களிடம் கொடுத்துள்ளார்.
இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
காவல் ஆய்வாளர் ராஜா சோமசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 4 பேர் சிறுவனை ஏமாற்றி ரூ. 40 ஆயிரத்தை வாங்கியிருப்பதும். அந்தப் பணம் முனீஸ்வர் நகரைச் சேர்ந்த ராஜரத்தினம் (39) என்ற பெண்ணிடம் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜரத்தினத்தை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய நான்கு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுடையவர்கள் ஆவர்.