உரிகம் வனப் பகுதியில் குட்டியை ஈன்ற 20 நாள்களில் பெண் யானை இறந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், உரிகம் வனப்பகுதியையொட்டி மஞ்சுகொண்டப்பள்ளி கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் பிறந்த 20 நாள்களே ஆன குட்டியுடன் பெண் யானை ஒன்று சுற்றித் திரிந்தது.
இந்த நிலையில், அந்த பெண் யானை அப் பகுதியில் உள்ள சேற்று நீரைக்
குடித்ததால், வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வனப் பகுதியில் அந்த பெண் யானை திங்கள்கிழமை இறந்தது. இதை வனப் பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் தீபக் வில்ஜி உத்தரவின் பேரில், மாவட்ட உதவி வன அலுவலர் பிரியதர்ஷினி, உரிகம் வனச்சரகர் திருமுருகன் மற்றும் வனத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும், கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் அந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர்.
தாய் யானை இறந்ததால், அதன் குட்டி அந்த இடத்திலேயே சிறிது நேரம் சுற்றித் திரிந்துள்ளது. இதை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அந்தக் குட்டி யானை உரிகம் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. குட்டி யானைக்கு பிற வன விலங்குகளால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக வனத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.