பாரூர் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் மாதன், பழனிசாமி ஆகியோர் வாயில் கருப்புநிற துணியைக் கட்டிக் கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் அளித்த மனுவின் விவரம்: பாரூர் ஏரிக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் விட கோரிக்கை வைத்தோம். ஆனால், காலதாமதம் ஏற்படுத்திவிட்டு, காலம் தாழ்த்தி பொதுப்பணித் துறையினர் தண்ணீர் விட்டனர். இதனால், முன்னுரிமையில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கு முழுக்காரணம் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், பாரூர் ஏரியில் உள்ள தண்ணீரை பாசனத்துக்கு திறந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.