காஸ் சிலிண்டர் வெடித்ததில் தொழிலாளி சாவு
ஒசூர் அருகே காஸ் சிலிண்டர் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
அஸ்ஸாம் மாநிலம், சுகர்புனே பகுதியைச் சேர்ந்தவர் லோஜின்ஜித் சின்ஹா (37). இவர் தனது மனைவி மெம்சின்காவுடன் (32) ஒசூரை அடுத்த பாகலூர் சிச்சிறுகானப்பள்ளியில் வசித்து வந்தார். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி மெம்சின்கா தனது வீட்டில் சமையல் செய்துவிட்டு சிலிண்டரை அணைக்காமல் உறங்க சென்றுவிட்டாராம். இந்த நிலையில், லோஜின்ஜித் சின்ஹா வீட்டின் மின் விளக்கு பொத்தானை இயக்கியபோது, மின் கசிவு ஏற்பட்டு காஸ் தீப்பிடித்து சிலிண்டர் வெடித்தது.
இதில் தீக்காயமடைந்த இருவரும் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லோஜின்ஜித் சின்ஹா உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.