போச்சம்பள்ளி அருகே இறந்த மகனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.
போச்சம்பள்ளி அருகில் உள்ள வி.ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர், ஓசூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு கடந்த 16-ஆம் தேதி திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சூளகிரி சின்னாறு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 18-ஆம் தேதி கார்த்திக் இறந்தார். இதையடுத்து அவரது இதயம், கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர். இதையடுத்து சொந்த ஊரில் அவரது உடலை அடக்கம் செய்தனர். இறந்த கார்த்திக்கின் தந்தை நாகராஜ், தாய் வசந்தா ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். அவரது தம்பி பிரசாந்த் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.