கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் ஓ.ஆர்.எஸ். மருந்து கலவை மற்றும் ஜிங்க் மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார். இந்த முகாம் ஜூலை 1}ஆம் தேதி வரையில் நடைபெறும். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,58,400 குழந்தைகள் பயன்பெறுவர். ஓ.ஆர்.எஸ். கலவை மருந்து, ஜிங்க் மாத்திரை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது நலப் பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியா ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.