மத்தூர் அருகே மணல் கடத்தியதாக ஓட்டுநரை கைது செய்த போலீஸார், டிப்பர் லாரியை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மத்தூர் அடுத்த குனத்தூர் கொடமாண்டப்பட்டி வழியாக மணல் கடத்துவதாக மத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆண்டவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது பெரியஜோகிப்பட்டி அருகே மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்ததில், மத்தூரை அடுத்த நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியம்மாள் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் சுரேஷ் ஓட்டி வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்திய லாரி மற்றும் 3 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்து மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஓட்டுநர் மீது வழக்குப் பதிவுசெய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வாகன உரிமையாளரை போலீஸார் தேடிவருகின்றனர்.