ஒசூரில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் பெண் உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர்நகர் மாவட்டம் சமன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (25). இவரது மனைவி மீனாதேவி (23). இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் அஜய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் ஒசூரில் பேடரப்பள்ளி ராஜாஜி நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த சந்தோஷ்குமார், சூளகிரியை அடுத்த சப்படியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் அடுப்பில் மீனாதேவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பு வெடித்து சிதறியதில் மீனாதேவி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாதேவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஒசூர் சார் -ஆட்சியர் சந்திரகலா விசாரணை நடத்தி வருகிறார்.