பர்கூர் அருகே உள்ள ஜெகினிகொல்லை பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகினிகொல்லை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி ஜூன் 25- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுத்தி புண்யாவாசனம், கரிகோல உற்சவம், பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை காலையில் மங்கள இசை, சுப்ரபாதம், சுத்தி புண்யாவாசனம், இரண்டாம் கால கலச பூஜை ஹோமம், மூல மந்திர ஹோமம், உபசார பூஜை, நேவேதியம், மங்கள ஆர்த்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் கோபுரக் கலத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கடரமண சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை விழாக் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.