வேப்பனஅள்ளி அருகே ஜோதிடம் பார்ப்பதாக கூறி, வீட்டுக்குள் புகுந்து ரூ.40 ஆயிரத்தை திருடிய 2 இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பஅள்ளியை அடுத்த எட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (30). இவர் அந்தப் பகுதியில் புத்தகக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வீட்டில் ரவி தனியாக இருந்த போது, அங்கு வந்த 2 இளைஞர்கள், ஜோதிடம் பார்ப்பதாக கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் ரவியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டனராம். அப்போது, தண்ணீóர் எடுக்க ரவி வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர்கள், அலமாரியில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடி அங்கிருந்து வெளியேறினராம்.
இதையடுத்து, வீட்டில் வைத்திருந்த பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி, பொதுமக்களின் உதவியுடன் தப்பிச் சென்ற 2 இளைஞர்களைப் பிடித்து அவர்களது உடமைகளை சோதித்தாரம். அதில், வீட்டில் திருடிய ரூ.40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்த அந்த 2 இளைஞர்களையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம், வாலஜா அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25), வீரபத்திரன் (23) என தெரியவந்தது. இதையடுத்து வேப்பனஅள்ளி போலீஸார் அந்த 2 இளைஞர்கள் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.