ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள கொண்டம்பட்டி புதூர் காட்டுப் பகுதியில் வனவர் வி.ராஜேந்திரன், வனக் காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பன்னீர் செல்வம் ஆகியோர் வியாழக்கிழமை மாலை வேட்டை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் மானை வேட்டையாடி இறைச்சியை வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கொண்டம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (41), எக்கூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (32), ஆண்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (30) ஆகிய மூன்று பேரும் மானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.