தொழில்சாலைகளிடம் கூடுதல் வரி வசூல் ஒசூர் நகராட்சிக்கு ஜி.கே.மணி கண்டனம்
தொழில்சாலைகளிடம் கூடுதல் வரி வசூலிக்கும் ஒசூர் நகராட்சியின் நடவடிக்கைக்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
ஒசூரில் தொழில்சாலைகள் ஆண்டுதோறும் உரிமத்தைப் புதுப்பிக்க ஒரு எச்.பி. மின்சாரத்துக்கு ரூ.10-ஆக இருந்தது ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு தொழில்சாலையில் 2,000 எச்.பி. மின்சாரம் பயன்படுத்தினால், ரூ.2 லட்சம் வரியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு தொழில்சாலைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும்.
ஒசூரில் உள்ள தொழில்சாலைகள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் பெற்றாலும், நகராட்சி நிர்வாகம் தொழில் துறையினருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ஏதும் செய்வதில்லை.
தொழில் துறையினருக்குத் தேவையான சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதிகளை சிப்காட் நிறுவனம் செய்து வருகிறது. தொழில்சாலைகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயை மட்டும் பெற்று கொண்டு நகராட்சி நிர்வாகம் எந்தவித வளர்ச்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்றார்.