கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலின விகிதாசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் மாவட்ட அளவிலான அரசு அனுமதி பெற்ற ஸ்கேன் மைய மருத்துவ அலுவலர்களுக்கான தொடர் மருத்துவப் பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஆண், பெண் பாலினம் அறிவிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பர பதாகைகளைக் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். பெண் சிசு கொலை, இளம் வயது திருமணங்கள் தடுத்தல், பாலின விகிதாசாரம் சரியாக இருக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவர்களின் செயல்பாடுகள் மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் என்றார்.
மருத்துவ பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், மகப்பேறு மருத்துவ அலுவலர்கள் மலர்விழி வள்ளல், நந்தினி, செல்வி, எழிலரசி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) முல்லைசாரதி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற்றனர்.