கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசு மூலம் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, புதிய ஸ்மார்ட் கார்டு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள முகவரிதான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும். அதில் மாற்றம் இருப்பின் பதிவு செய்ய இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்ற பகுதியைத் தேர்வு செய்தால், தங்களது செல்லிடப்பேசி எண் விவரம் கேட்கப்படும்.
நியாய விலைக் கடையில் பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தால் ஒரு ரகசியக் குறியீட்டு எண் (ஓடிபி) வரும். அந்த எண்ணை பதிவு செய்தால், தங்களது குடும்ப அட்டை குறித்த விவரம் தெரியும்.
அதில் முகவரி என்ற இடத்தை தேர்வு செய்து, புதிய முகவரியைப் பதிவு செய்தால், புதிய முகவரி ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்படும். மேலும், குடும்ப அட்டையில் விடுபட்ட குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க, நியாய விலைக் கடையில் உள்ள விற்பனை முனைய (பிஓஎஸ்) எந்திரம் மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.
எனவே, குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.