வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2011, 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தங்களது பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பிக்க விருப்பும் பதிவுதாரர்கள் நவ.21-ஆம் தேதிக்குள் தங்களது பதிவை இணையதளம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
2011, 2012, 2013,1014, 2015 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுத்தாரர்கள், பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1.1.2011 முதல் 31.12.2015 வரை இருக்குமாயின், இந்த சிறப்பு சலுகை அவர்களுக்கு பொருந்தும். டிசம்பர் 2010- வரை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
இணையதளம் மூலகமாக சலுகையின் கீழ் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதார் எண், குடும்ப அடையாள அட்டை, சாதிச் சான்று ஆகியவற்றுடன் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். நவ.21-ஆம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அதில் அவர் தெரிவித்தார்.