கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கொத்தமல்லி தழை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, உத்தனப்பள்ளி, பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, புலியரசி, மருதாண்டப்பள்ளி, ஏ. செட்டிப்பள்ளி, மாரண்டப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கொத்தமல்லி தழையை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
சூளகிரி மொத்த விற்பனை அங்காடியில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறி விற்பனை அங்காடி, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொத்தமல்லி கட்டுகள் தினமும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொத்தமல்லி கட்டு ஒன்றின் விலை அதிகபட்சமாக ரூ.50 வரை விற்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்த கனமழைக் காரணமாக வரத்து அதிகரித்ததால், கடந்த சில நாள்களாக கொத்தமல்லி கட்டின் விலை ரூ. 2 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒரு ஏக்கரில் பயிர் செய்து வந்த விவசாயிகள் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வந்த நிலையில், தற்போது சில ஆயிரங்கள் மட்டுமே கிடைப்பதால் கவலை அடைந்துள்ளனர்.